Showing posts with label பக்திக் கதைகள். Show all posts
Showing posts with label பக்திக் கதைகள். Show all posts

Tuesday, 23 August 2011

எது சிறந்த பக்தி?

துரியோதனனுடன் சூதாடித் தோற்றார் தருமர். பாண்டவர்களின் ராஜ்யத்தைக் கைப்பற்ற, அவர்களைக் கொன்றொழிக்க பல முயற்சிகள் செய்து வந்தான் துரியோதனன். ஆனாலும் பாண்டவர்கள் தர்ம வழியில் நடப்பவர்கள் என்பதால் எல்லாச் சூழ்ச்சியிலும் தப்பி, பத்து வருட வனவாசத்தை ஏற்று, காட்டில் வாழச் சென்றார்கள்.

காட்டில் வாழ்ந்து வந்த குந்திதேவி, பாஞ்சாலி, பஞ்சபாண்டவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் பீமனோ, தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுவான். இதனால் அவன் பிரார்த்தனையில் பங்குபற்றுவதில்லை.

ஒருநாள் "நீ யானைபோல் பலசாலிதான், ஆனாலும் பிரார்த்தனையில் ஈடுபடும் எண்ணமே இல்லாமல் இருக்கிறாயே. உனக்கு ஏன் பக்தி இல்லாமல் போயிற்று!" என்று கடிந்தார் தருமர். இதன்பிறகாவது நேரத்திற்கு எழுந்து பிரார்தனையில் கலந்து கொள்வான் என்று எண்ணினார் தருமர். ஆனாலும் வழக்கம்போல தாமதமாகவே பீமன் படுக்கையிலிருந்து எழுவான்.

ஒரு நாள் கிருஷ்ணரை விருந்துக்கு அழைக்க எண்ணி, "நகுலனை, கிருஷ்ணரிடம் அனுப்பி வைத்தார். நகுலன் திரும்பி வந்து "நாளைக்கு கிருஷ்ணருக்கு வேறு வேலை இருக்கிறதாம். வேறு ஒருநாள் தான் அவரால் வரமுடியுமாம்" என்று கூறினான்.

"நீங்களெல்லாம் கூப்பிட்டால் கிருஷ்ணன் வரமாட்டார். நான் போய் அழைத்து வருகிறேன் பாருங்கள்" என்று கூறியவாறு அருச்சுனன் நம்பிக்கையுடன் எழுந்து சென்றான். அங்கு சென்ற அருச்சுனனும், நாளை விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தான். "என்ன செய்வது, நாளைக்கு எனக்கு வேறு வேலை இருக்கிறதே" என்றார் கிருஷ்ணர். மனம் இடிந்தவனாக,அருச்சுனன் திரும்பினான். அருச்சுனன் போய் அழைத்தும், கிருஷ்ணர் வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டாரே.. என்று எல்லொரும் கவலையாக இருந்தனர்.

வழக்கம் போல, தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்த வந்த பீமன், "ஏன் எல்லோரும் என்னவோ போல இருக்கிறீர்கள்?" என்று வினவினான். அப்பொழுது தருமர், "ஒன்றுமில்லை, கிருஷ்ணரை இன்று விருந்துக்கு அழைத்திருந்தோம், அவருக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார்" என்றார். "இவ்வளவுதானா.., நான் போய் கிருஷ்ணரை அழைத்து வருகிறேன்" என்றான் பீமன்.

"நான் போய் அழைத்து வரமுடியாத கிருஷ்ணர்.., நீ கூப்பிட்டு வந்துவிடுவானா.." என்று அருச்சுனன் கிண்டல் செய்தான். பீமன் தனது கதையை (தண்டாயுதம்) தூக்கிக் கொண்டு புறப்பட்டான். போகும்போது "பாஞ்சாலி... நீ விருந்து தயார் செய். கிருஷ்ணனுக்கு வெள்ளித் தட்டில் சாப்பாடு எடுத்து வை" என்று கூறிவிட்டுச் சென்றான்.

சிறிது தூரம் போனபின், தன் கதையை வானத்தை நோக்கி வீசி எறிந்தான்! "கிருஷ்ணா! நீ விருந்துக்கு வருகிறாயா இல்லையா? வராவிட்டால் நான் வீசிய கதை என் தலைமேல் விழுந்து, நான் என் உயிரை விடுவேன்." என்று உரக்கக் கத்தினான். உடனடியாக கிருஷ்ணர் தோன்றி, பீமனின் தலைக்கு மேலாக விழுந்து கொண்டிருந்த கதையை சட்டென்று பிடித்துக்கொண்டார்! பீமனின் அன்பு அழைப்பினை ஏற்று, அவனோடு விருந்திற்கு வந்தார். பீமனோடு கிருஷ்ணர் வருவதைக் கண்டதும், கேலி செய்தவர் தலை குனிந்தனர்.

பீமனின் பக்திதான் சிறந்தது என்று நிரூபணம் ஆயிற்று. அவன் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை என்பதை உணர்ந்தான் அருச்சனன். தினமும் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாத போதிலும், அவன் பக்தியே தூயதாகவும் தன்னலம் அற்றதாகவும் இருந்தது.



Wednesday, 29 June 2011

பரந்தாமனின் தலைவலியும், மருந்தாக பக்தரின் பாத தூசியும்...

அன்று வைகுண்ட ஏகாதசி நாளாகும். பகவான் கிருஷ்ணரைத் தரிசிக்க, துவாரகை வாசிகளும், மகான்களும், மகரிஷிகளும், பக்தர்களும் பெருமளவில் வந்திருந்தார்கள்.

இந்தக் கூட்டத்தைக் கண்ட நாரதர் "ஆகா... எல்லோருக்கும் எத்தகைய பக்தி! உபவாசமிருந்து பகவானைத் தரிசிக்க வந்திருக்கிறார்களே" என்று பெருமிதப்பட்டார். அங்கிருந்த ருக்மிணிகூட அசந்து போனாள். "இவர்களது பக்திக்கு ஈடேது இணையேது... நம்பமுடியவில்லையே" என்றாள்.

இதைக்கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணர், மனதிற்குள் சிரித்தார். பக்தியின் உண்மைத் தத்துவத்தை விளக்க வேண்டும் என்று நினைத்தார். பிறகு தனக்கு தாங்க முடியாத தலைவலி இருப்பதாக நடித்தார்! மஞ்சத்தில் படுத்து துடிதுடித்தார். பரந்தாமனுக்கே தலைவலியா என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

மருத்துவர் "தன்வந்திரி" வந்து மருந்து கொடுத்தார். நாரதர், ருக்மணி எல்லோரும் மனம் கலங்கி நின்றார்கள்! சிறிது நேரத்தின் பின்பும், பரந்தாமன் தலைவலியால் துடிதுடித்தார். வந்தவர்கள் எல்லோரும் கலங்கி நின்றனர். "கிருஷ்ணா! தன்வந்திரிக்கே உன் தலைவலிக்கு மருந்து தெரியவில்லை. நீர் படும் வெதனையை எங்களால் பார்த்துக் கொண்டு இருக்க மடியவில்லை. இதற்கான மருந்தை நீரே கூறும், எங்கிருந்தாலும் போய் கொண்டுவருகிறோம்" என்று கேட்டார் நாரதர்.

"இதற்கு மருந்து என் பக்தர்களிடம்தான் இருக்கிறது. கேட்டால் அவர்கள் தருவார்களோ என்றுதான் அஞ்சுகிறேன்" என்றார் கிருஷ்ணர். "இதென்ன கிருஷ்ணா! நாம் எல்லோருமே உமது பக்தர்கள்தானே, யாரிடம் இருக்கிறது என்று சொன்னால், உடனே தரக்காத்திருக்கிறோம்" என்று நாரதர் உற்சாகமாகப் பதிலளித்தார்.

"அப்படியா நாரதா! எனது பக்தரின் பாத தூசியை எனது சிரசில் தடவினால் இந்த தலைவலி நீங்கிவிடும். உங்களில் யார் தரப்போகிறீர்கள்?" என்று கேட்டார் கிருஷ்ணர். இதைக்கேட்டு, எல்லோரும் திடுக்கிட்டனர்! பரமபக்தரான நாரதரையே எல்லோரும் பார்த்தார்கள்.

நாரதர் வெகுண்டார். "எல்லோரும் என்னை ஏன் பார்க்கிறீர்கள், நான் பரந்தாமனின் பக்தன்தான், ஆனாலும் எனது பாத தூசியை பகவான் தலையில் போட்டு.., பெரும் பாவத்தைத் தேடிக்கொள்ள விரும்பவில்லை. அப்படிச் செய்தால் கொடிய நரகம்தான் எனக்குக் கிடைக்கும். ஏன் பரந்தாமனின் பத்தினி அதைச் செய்யலாமே.. என்றார்.

"நான் அந்தப் பாவத்தை ஒருபோதும் செய்யமாட்டேன்" என்றாள் ருக்மிணி. "பிரபு! வேறு மருந்தைச் சொல்லுங்களேன்" என்றார் நாரதர். "நாரதா! பிருந்தாவனம் சென்று கோபிகளைக் கேட்டுப்பாரும், யாராவது தரக்கூடும்" என்றார் கிருஷ்ணர்.

நாரதர் உடனே பிருந்தாவனம் சென்று, செய்தியை கோபிகளுக்குச் சொன்னார். சில கோபிகள் மயங்கி வீழ்ந்தனர். "அட பாவிகளா! இங்கு இருக்கும் வரை அவருக்கு எந்த வருத்தமும் வந்ததில்லையே. துவாரகையில் அவரைச் சரியாகக் கவனிக்க வில்லையா? என்று கேட்டு நாரதரைப் புடைந்து எடுத்தனர். "தங்கள் பாத தூசியை அவரின் தலையில் போட்டு, கொடிய நரகத்திற்குப் போக அங்கு யாரும் விரும்பவில்லை. ஆகவேதான் இங்கு வந்தேன்" என்று பயத்துடன் கூறினார் நாரதர்.

"எங்களில் உண்மையான பக்தை யார் என்று பார்க்க இப்பொழுது நேரமில்லை. எங்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, பகவானின் தலைவலி நீங்கினால் போதும்" என்று கூறியவாறு ஒருத்தி துணியை விரிக்க.., மற்றைய கோபியர் அதில் தங்கள் கால் தூசியைச் சேர்த்தனர். அதை ஒரு பொட்டலமாக முடிந்து கொடுத்து, "கதைத்து நேரத்தைப் போக்காமல், உடனடியாகச் சென்று அவரின் தலைவலியைக் குணப்படுத்துங்கள்" என்று நாரதரை அனுப்பி வைத்தார்கள் கோபிகள்.

"எங்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, பகவானின் தலைவலி நீங்கினால் போதும்" என்று கோபிகள் சொன்னது நாரதரின் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. பயனை எண்ணாது, பகவானை எண்ணுவதே தூய பக்தி என்பதை புரிய வைக்க பகவான் நடத்திய நாடகம் என உணர்ந்தார் நாரதர்!.

கிருஷ்ணரிடம் சென்று அந்த முடிச்சிலிருந்த கோபியரின் பாத தூசியை தனது தலையிலே போட்டுக்கொண்ட நாரதர், தங்களுக்கு எக்கேடு வந்தாலும் பரவாயில்லை, பரந்தாமனுக்கு எக்கேடும் வரக்கூடாது என்று எண்ணும் கோபியரின் பக்தியே மேன்மையானது என்றார்.


Saturday, 25 June 2011

சகாதேவனின் சாஸ்திரமும், அமாவாசை முன்னுக்கு வந்த விதமும்..

பாண்டவர் வனவாசம் முடித்து வந்ததும், அவர்களுக்குரிய நாடுதரலாம் என்று கூறியிருந்தான் துரியோதனன். நாடு தருவதாகச் சொன்ன துரியோதனன், அவர்கள் திரும்பி வந்தபின் ஒரு ஊரையேனும் கொடுக்க மறுத்தான்! துரியோதனனாதியோர் அதர்ம வழியில் நடப்பதை எல்லோரும் கண்டித்தனர், ஆனாலும் பலன் அளிக்கவில்லை.

கிருஷ்ணரும் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றார். அதர்ம துரியோதனன் போரையே விரும்பினான்! இறுதியில் கிருஷ்ணர் ஆயுதம் ஏந்தாத தேர் சாரதியாக பாண்டவர் பக்கமும், அவரது படையை துரியோதனனும் எடுத்துக் கொண்டான். அதர்ம வழியில் செல்பவர்கள் அழிய வேண்டுமே! ஆகவே போர் முடிவாயிற்று.

பஞ்சபாண்டவர்களில் கடைசித்தம்பியான சகாதேவன் சாஸ்திரக் கலையை கரைத்துக் குடித்தவன். ஆகவே, துரியோதனன் இவனிடம் வந்து, போரை எப்பொழுது ஆரம்பித்தால் தனக்கு வெற்றி கிடைக்கும் என்று கேட்டான். தர்மவழியில் நடக்கும் பஞ்சபாண்டவர்களுள் ஒருவனான இவன் "வருகிற அமாவாசையில் துவங்கினால் உனக்கே வெற்றி" என்ற உண்மையைக் கூறினான்! சகாதேவன் துரியோதனனுக்கு நாள் குறித்துக் கொடுத்த விஷயம் கிருஷ்ணருக்கும் எட்டியது.

நாளை அமாவாசை.. ஆகவே, போர் ஆரம்பிப்பதற்கு எல்லா ஆயத்தங்களையும் செய்து கொண்டிருந்தான் துரியோதனன். நாளை அமாவாசை என்று இருந்தபொழுது, அமாவாசைக்குரிய சடங்குகளை இன்றே நடத்துங்கள் என்று பாண்டவர்களுக்குக் கட்டளையிட்டார் கிருஷ்ணர். நாளைதானே அமாவாசை என்று அவர்கள் அசட்டையாக இருந்தார்கள். கிருஷ்ணர் எல்லோரையும் வரவழைத்து, அமாவாசைக்குரிய சடங்கை அவரே ஆரம்பித்து வைத்தார்.

அமாவாசைக்குரிய சடங்குகள் மிக விமரிசையாக நடந்து கொண்டிருந்தது! சூரியனும், சந்திரனும் மிக கிட்டவே நின்றிருந்த சமயம் அது. "இவர்கள் நாளை செய்ய வேண்டிய சடங்கை இன்றே செய்கிறார்களே...நாம் போய் நாளைதான் அமாவாசை என்பதை விளக்கிக் கூறுவோம்" என்று தீர்மானித்த சூரியரும் சந்திரரும், இறங்கி சடங்கு நடக்கும் இடத்திற்கு வந்தார்கள். "நாளை தானே அமாவாசை, இச்சடங்கை நாளை செய்யுங்கள்" என்று கூறியவாறு, அதை நிறுத்த முயன்றனர்.

அப்பொழுதுதான், மோகனப் புன்முறுவலுடன் நின்ற கிருஷ்ணரை சூரியனும், சந்திரனும் கண்டனர். "சூரிய சந்திரர்களே! கொஞ்சம் பொறுங்கள். சூரியனும் சந்திரனும் ஒன்று சேரும் நாளன்றோ அமாவாசை! இப்பொழுது இருவரும் சேர்ந்துதானே இங்கே நிற்கிறீர்கள். ஆகவே, இன்று தானே அமாவாசை" என்றார் கிருஷ்ணர்! விஞ்ஞான ரீதியிலும், சூரியனும் சந்திரனும் ஒன்றாக நிற்கும் பொழுதே, பூமிவாசிகளுக்கு அமாவாசை.

ஆகவே சூரியர் சந்திரருக்கு அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று! அதைத் தொடர்ந்து, அமாவாசை சடங்கு தடல்புடலாக நடந்து முடிந்தது. துரியோதனன் மறுநாளே போரை ஆரம்பித்தான், ஆகையினால் அவனால் வெற்றிபெற முடியவில்லை.


Tuesday, 21 June 2011

பிரார்த்தனையும்! அருளும்!

குருவாயூரில் இரண்டு கிருஷ்ண பக்தர்கள் இருந்தார்கள். ஒருவர் "குரூரம்மை" என்ற பெண்மணி, மற்றவர் "பில்வமங்கள்". இவ்விருவருக்கும் கண்ணன் குழந்தை கண்ணனாகவே பேசி, விளையாடி மகிழ்விப்பான்.

கண்ணனைக் காணாமல் குரூரம்மை சாப்பிடாமலே இருப்பாள். பில்வமங்களோ தன்னிடம் இருக்கும் துளசி தீர்த்தத்தையே கண்ணனைச் சாப்பிடச் சொல்வான். இருந்தாலும் இருவருமே பக்தர்கள்தான்.

ஒருநாள் இவ்விருவருக்கும் தெரிந்த ஒருவர் வயிற்றுவலியால் தவித்தார். அவர் பில்வமங்களிடம் சென்று "எனது வயிற்று வலிபற்றி உன் கிருஷ்ணரிடம் கொஞ்சம் சொல்லக்கூடாதா?" என்று கேட்டான். பில்வமங்கள் கிருஷ்ணரைக் கண்டபொழுது "எனது நண்பன் ஒருவன் வயிற்றுவலியால் ரொம்பவும் கஷ்டப்படுகிறான். இதற்கு ஏதும் செய்ய முடியதா? " என்று கேட்டார். "அதற்கு என்ன செய்வது. அது அவனது பூர்வ ஜென்ம வினை. இப்பொழுது அனுபவிக்கிறான்" என்றார்.

வயிற்றுவலி குணமடையாத காரணத்தால், அவன் குரூரம்மையிடம் போனான். "அம்மா! என்னால் இந்த வயிற்றுவலியைத் தாங்க முடியவில்லை. உன் கிருஷ்ணரிடம் கொஞ்சம் சொல்லக்கூடாதா?" என்று கேட்டான். கண்ணன் குரூரம்மையிடம் வந்த பொழுது "எனக்குத் தெரிந்த ஒருவன் வயிற்றுவலியால் மிகவும் கஷ்டப்படுகிறான். அவன் வலியை நீ போக்கக்கூடாதா" என்று வேண்டுகோள் விடுத்தாள். "ஆகட்டும். அவன் வலியை போக்குகிறேன்" என்றான் கண்ணன். அவனின் வயிற்றுவலியும் நீங்கியது.

ஓர் நாள் பில்வமங்கள் வயிற்றுவலி நண்பனைச் சந்தித்தபொழுது, அதுபற்றி விசாரித்தார். "அதுவா, குரூரம்மை எனக்காக கண்ணனிடம் சொன்னாள். அது இருந்த இடம் தெரியாமல் பறந்துவிட்டது" என்றான். பில்வமங்கள் கோபத்துடன் கண்ணனுக்காக காத்திருந்தார். "அந்த வயிற்றுவலிக்காரனைப் பற்றி நான் சொன்னபொழுது, "அது அவன் பூர்வ ஜென்ம வினை என்றாய், குரூரம்மை சொன்னவுடனேயே வயிற்றுவலியைப் போக்கிவிட்டாயே" என்று கோபத்துடன் கூறினான்.

"ஆமாம்.., குரூரம்மை வயிற்றுவலியைப் போக்கு" என்று தாயுள்ளத்துடன் கேட்டாள். ஆனால் நீயோ, "வயிற்று வலிக்கு எதுவும் செய்யமுடியாதா?" என்றுதானே கேட்டாய்! என்னுடைய அருளும் அனுக்கிரகமும் எப்படிப் பிரார்த்தனை செய்கிறார்களோ, அதைப் பொறுத்தே அமைகிறது. இதில் வேண்டியவன், வேண்டாதவன் என்று ஒன்றும் இல்லை என்றார் கண்ணன்.

"பிரபோ! வயிற்றுவலியைப் போக்கும்படி கேட்காதது என் தவறுதான். பிரார்த்திப்பதில்கூட சூட்சுமம் இருப்பதை இப்போது அறிந்து கொண்டேன். என் மனம் தெளிந்தது. என்னை மன்னிப்பாயாக" என்று கைகூப்பி வணங்கி நின்றான் பில்வமங்கள்.



Sunday, 19 June 2011

பகவானைச் சரணடைந்த தவளைக் குஞ்சு...

வனவாசம் நடத்திவந்த பாண்டவர்களைப் பார்த்துவர, ஒருநாள் கிருஷ்ணர் அங்கு சென்றார்.

கிருஷ்ணரைக் கண்ட குந்திதேவி "காட்டிலே எத்தனை நாள்தான் அவதிப்பட முடியும்" என்று சலிப்புடன் கேட்டாள். "அத்தை, எல்லாவற்றிற்கும் ஒருமுடிவு காலம் உண்டு. விரைவில் நல்ல காலம் வரும். கவலைப்படாதே" என்று ஆறுதல் கூறினார் கிருஷ்ணர்.

கிருஷ்ணரைக் கண்ட பாஞ்சாலி ஓடிவந்து "அண்ணா! நல்ல காலம் வருகிறபோது வரட்டும், முதலில் வந்த களைப்புத் தீர நீராடுங்கள். சட்டென வெந்நீர் சுடவைக்கிறேன்" என்று கூறியவாறு அடுப்பங்கரைக்குப் போக, வீமன் காய்ந்த சுள்ளிகளைக் கொடுத்து, அண்டாவிலும் நீர் கொண்டுவந்து கொடுத்தான். அடுப்பு நன்றாக எரிந்து கொண்டு இருந்தது. நீர் கொதிக்கும்வரை, எல்லோரும் உரையாடிக் கொண்டு இருந்தனர்!

"அருச்சுனா! வனவாசம் எப்படி இருக்கு" என்று கேட்டார் கிருஷ்ணர். "நீங்கள் எங்கள் இதயத்தில் இருக்கும் வரை, எங்களுக்கு ஏது கவலை. நகரத்தில் இருந்ததைவிட, மகிழ்ச்சியாகவே பொழுது போகிறது" என்றான். கிருஷ்ணர் தருமரைப் பார்த்து "தர்மா! தம்பி சொல்வதைக் கேட்டாயா, நாட்டைவிட காடே சுகம் என்கிறானே!" "அதில் என்ன தப்பு, இயற்கை அழகிற்கு ஈடு இணை ஏது" என்றார் தருமர். பிறகு "பாஞ்சாலி! நீ என்ன நினைக்கிறாய்" என்று கேட்க, "காடோ நாடோ, எனக்கு இவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம்" என்றாள். "அப்படியானால் நல்லது.., நீர் சுட்டுவிட்டதா பார்" என்றார் கிருஷ்ணர்.

இப்பொழுது நன்கு சுட்டிருக்கும் என்று கூறியபடி, பார்க்கச் சென்றாள். "அடுப்பு இவ்வளவு நன்றாக எரிகிறதே, இன்னும் நீர் குளிராகவே இருக்கிறது" என்று குரல் கொடுத்தாள். பீமனும் அங்கு சென்று பார்த்துவிட்டு "இது என்ன அதிசயம்! இவ்வளவு நேரமாகியும், நீர் குளிராகவே இருக்கிறதே" என்று கூறியவாறு அவர்கள் பேசிக் கொண்டு இருந்த இடத்திற்கு வந்தான்.

"அப்படியா! வாருங்கள் பார்க்கலாம்" என்றவாறு எல்லோரையும் அழைத்து வந்தார் கிருஷ்ணர். அண்டாவில் கையை விட்டுப் பார்த்துவிட்டு "ஆமாம்! தண்ணீர் சில்லென்று குளிர்கிறதே, இதை ஊற்றிவிட்டு வேறு நீர் வையுங்கள்" என்றார் கிருஷ்ணர்.

பீமன் அண்டாவைச் சரிக்க, அதிலிருந்து தவளைக் குஞ்சு தத்திக் கொண்டு வெளியேறியது! அங்கு நின்ற குந்திதேவி "இதென்ன ஆச்சரியமாய் இருக்கிறதே" என்றாள். அருகில் நின்ற தருமர் "இதில் என்ன ஆச்சரியப்படுவதற்கு இருக்கிறது! தவளை அண்டாவினுள் இருந்தபடியே பகவானைத் தஞ்சம் அடைந்திருக்கும், தஞ்சம் புகுந்தவரைக் காப்பது பகவானின் கடமையாச்சே" என்றார். "ஆமாம் தர்மா, அது அற்ப ஜீவனாக இருந்தாலும், சரணடைபவர்களை காப்பாற்றுவது கடமையாச்சே" என்றார் கிருஷ்ணர்.

ஒரே குரலில் எல்லோரும் "கண்ணா மணிவண்ணா, நாங்களும் சரணடைகிறோம" என்றார்கள். பலபேர் அழிந்த பாரதப்போரில், இவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்!

இருந்த இடத்தில் இருந்தவாறே முழு மனதுடன் பகவானை வேண்டிக்கொண்ட தவளைக்குஞ்சு, வியக்கத்தக்க விதத்தில் உயிர் தப்பியது! பக்தி உண்மையானால் பலன் கிடைக்கும்.



Monday, 8 November 2010

பிறருக்கு நீ செய்வது..

ஒருவன் மலையைக் கடந்து அடுத்த ஊருக்குச் செல்வதற்காக மலை ஏறிக்கொண்டிருந்தான். அப்போது வழியில் ஒரு துறவியும் வந்து சேர்ந்தார். இருவரும் பேசிக் கொண்டே போகும் போது..

அவன் தன்மனக் குறையை துறவியிடம் சொன்னான். யாரும் தன்னிடம் பாசமாகவும், உண்மையாகவும் பழகுவதில்லை. உதவிக்க வருவதில்லை என அதங்கத்துடன் சொல்லிக் கொண்டே வரும் போது அவன் காலை ஒரு கல் தடுக்கியது. உடனே அவன் "ஆ" என்று கத்தினான் அது மலையெங்கும் எதிரொலித்தது.

அப்போது துறவி அவன் தோளில் தட்டி, "நல்லவன்" என்று உரக்கச் சொல்! என்றார். அவனும் "நல்லவன்" என்று சத்தமாகச் சொன்னான். உடனே, மலையின் எல்லா திசைகளிலிருந்தும் "நல்லவன்" என்று எதிரொலித்தது.

உடனே துறவி அவனிடம் "வாழ்க்கையும் அப்படித்தான். பிறருக்கு நீ என்ன செய்கிறாயோ அதுதான் உனக்கும் எதிரொலிக்கும்" என்று விளக்கினார் துறவி.

அன்றிலிருந்து அவன் எல்லோரிடமும் பாசமாகவும் அன்பாகவும் இருந்து உதவிசெய்து வரலானான். அதுபோல் மற்றவர்களும் அவனிடம் பாசமாகவும் அன்பாகவும் இருந்தனர்.


Sunday, 3 October 2010

'நாராயணா' நாம மகிமை...


சதா "நாராயணா நாராயணா" என்று உச்சரித்துக்கொண்டு திரியும் திரிலோக சஞ்சாரியான நாரதருக்கே.. அதன் மகிமையை அறிய வேண்டும் என்னும் ஆவல் வந்தது. நாராயணனான மஹாவிஷ்ணுவைத் தரிசிக்கச் சென்றபொழுது.. "உங்கள் திருநாமத்தின் மகிமைதான் என்ன? இதை உலகறியச் சொல்ல வேண்டாமா" என்று கேட்டார் நாரதர்.

"அப்படியா! பூலோகத்தில் ஏதாவதொரு துல்லிய ஜீவனிடம் என் நாமத்தைச் சொல்லிப் பாரேன்" என்றார் மஹாவிஷ்ணு. பூலோகம் இறங்கி வந்தார் நாரதர். சேற்றில் நெளிந்து கொண்டிருந்த பழுவைக் கண்டார். அதன் அருகில் சென்று "நாராயணா நாராயணா" என்று இருமுறை சொல்ல.. புழு துடிதுடித்து மரணம் அடைந்தது. நாரதர் அதைக் கண்டு திகைத்தார்.! அடுத்த முறை பகவானைத் தரிசிக்க வந்த பொழுது.. நடந்தவற்றைக் கூறினார்.

"அப்படியா.. பூலோகத்திற்குச் செல். அங்கு ஒரு பட்டாம்பூச்சி மலர் மீது அமர்வதைக் காண்பாய். அதனிடமும் என் திருநாமத்தைச் சொல்லிப் பாரேன்" என்றார் மஹாவிஷ்ணு. நாரதரும் அப்படிப் பூவில் அமரும் பட்டாம்பூச்சியைக் கண்டு.. அதன் அருகில் சென்று "நாராயணா நாராயணா" என்றார். சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சி.. திடீரென்று இறந்த வீழ்ந்தது. திரும்ப பகவானைத் தரிசிக்க வந்த பொழுது.. நாரதர் நடந்ததைக் கூறினார். "ஓ பட்டாம்பூச்சியும் மாய்ந்ததோ! சஞ்சலம் வேண்டாம் நாரதா. குட்டி மான் பால்குடித்துக் கொண்டிருப்பதைக் காண்பாய். அதன் செவியில் என் நாமத்தை ஒதுவாயாக" என்று கூறி அனுப்பி வைத்தார்.

நாரதரும் அப்படியொரு மான் குட்டி பால் குடிப்பதைக் கண்டபோது அதன் அருகில் சென்று.. தயக்கத்துடன் "நாராயணா நாராயணா" என்றார். அடுத்த கணம் அந்தக் குட்டிமான்.. துள்ளி எழுந்த வேகத்திலேயே வீழ்ந்து மடிந்தது. நாரதர் திடுக்கிட்டார். திரும்பவும் பகவானைத் தரிசிக்கப் போன பொழுது "பகவானே! புழு இறந்தது.. பட்டாம்பூச்சியும் மாய்ந்தது.. மான்குட்டியும் மடிந்தது. இதென்ன அபச்சாரம் மாதவா! என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

"அதற்குள் மனம் தளர்ந்தால் எப்படி? ஒரு பசுக்கன்று துள்ளி விளையாடுவதைக் காண்பாய். அதனிடம் சென்று என் நாமத்தை உச்சரிப்பாயாக" எனக் கூறி அனுப்பி வைத்தார். பசுக்கன்று துள்ளி விளையாடுவதைக் கண்ட நாரதர்.. இந்தப் பசுக்கன்றும் இறந்துவிடுமோ என்று பயந்தார். அதையும் பார்த்து விடுவோமே என்று எண்ணியவாறு பசுக்கன்றின் காதில் "நாராயணா நாராயணா" என்றார். பசுக்கன்றும் தொப்பென வீழ்ந்து இறந்தது. இதை எப்படிச் சொல்வது என்று தயங்கினார் நாரதர். பிறகு, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நாராயணனிடம் சென்றார்.

"பகவானே! காக்கும் கர்த்தாவாகிய உங்கள் திருநாமம் இப்படிச் சம்ஹாரத்தில் முடிவது என்ன சோதனை சுவாமி" என்று கேட்டார். "பிரம்மபுத்திரா.. அதற்குள் அவசரப்படுகிறாயே! காசிராஜன் மன்னனுக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அங்கு கோலாகல கொண்டாட்டம் நடைபெறுகிறது. நீ அந்த சிசவிடம் சென்று.." என்று சொல்லி முடிக்க முன் நாரதர் குறுக்கிட்டார். "சுவாமி.. என்னை கலகப் பிரியன் என்று தான் சொல்வார்கள். என்னை கொலைகாரன் பட்டத்துடன் உலவவிட திருவுளமோ" என்றவாறு தன் அதிருப்தியைத் தெரிவித்தார். "நாரதா! இந்த ஒரு தடவை மட்டும் அந்தக் குழந்தையின் செவியில் எமது நாமத்தை சொல்லி வருவாயாக" என்று கேட்டுக் கொண்டார்.

காசிராஜன் அரண்மனையில் நடந்த பிறந்ததின விழாவிற்கு நாரதர் சென்றார். "சுவாமி.. என் குமாரன் பிறந்த நாளில் தாங்கள் எழுந்தருளியது எங்கள் தவப்பயன். என் மைந்தன் பெயரும் புகழும் பெற்று சிறந்து விளங்க ஆசி கூறுங்கள்" என்று கூறியவாறே நாரதரை வரவேற்றார் காசிமன்னன். தயக்கத்துடன் குழந்தையின் காதில் "நாராயணா நாராயணா" என்று ஓதினார் நாரதர். என்ன ஆச்சரியம்.. குழந்தை பேச ஆரம்பித்ததைக் கேட்டு திகைப்படைந்தார். "மகரிஷி.., தங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள். நாராயண நாமத்தின் மகிமை இன்னுமா புரியவில்லை? என்று கேட்டது குழந்தை. " குழந்தாய் விபரமாகச் சொல்" என்றார் நாரதர்.

"ஆரம்பத்தில் புழுவாய் இருந்தேன். அப்பொழுது உங்கள் நாராயண மந்திரம்என்னைப் பட்டாம்பூச்சி ஆக்கியது. அதேபோல்.. மானாகி, பசுவாகி இப்பொழுது கிடைத்தற்கரிய மானிட பிறவி அடைந்ததும் அதே நாராயண மந்திர மகிமையால் தான்" என்று கூறியது குழ்ந்தை. நாராயண மந்திரத்தின் மகிமையைப் பரிந்து கொண்ட நாரதர்.. குழந்தையை வாழ்த்திவிட்டு தன் இருப்பிடம் சென்றார்.




Monday, 30 August 2010

கடவுள் சகாயம் இல்லாமல் எதுவும் கைகூடாது...

கண்ணபுரி ராஜ்யத்தை ஒரு காலத்தில் ஆண்டுவந்த மன்னன் சுந்தரவதன். இவனிடம் ஒரே ஒரு குறை இருந்தது. அதாவது, அவனுக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது.

ஒருநாள் அமைச்சருடன் மாறுவேடத்தில் நகர் சோதனையில் ஈடுபட்டிருந்தான். அப்பொழுது இருவர் பிச்சை கெட்ட விதம் மன்னனை வியப்படைய செய்தது. மறுநாள் அவர்கள் இருவரும் அரண்மனைக்கு அழைக்கப்பட்டார்கள்.

பிச்சை எடுக்கும்போது நீ "ராம சகாயம் ராம சகாயம்" என்று கூறுகிறாய், "ராஜ சகாயம், ராஜ சகாயம்" என்று சொல்கிறான். இதன் அர்த்தம் என்ன சொல்லுங்கள்" என்றார் அமைச்சர். முதலாமவன் "ஐயா! இந்த உலகத்தில் எல்லாருக்கும் படி அளக்கிறவன் சாட்சாத் ராமபிரான்தான். அவனது சகாயம் இருந்தால் போதும். எல்லாச் செல்வங்களும் தாமாகக் கிடைக்கும்" என்றான். இரண்டாமவன் "ஐயா! கண்ணுக்குத் தெரியாமலிருக்கும் கடவுளை விட, கண்ணுக்குத் தெரியும் அரசன் மேலல்லவா? ராஜாவின் சகாயம் இருந்தால் ஒருவன் பணக்காரனாகி விடலாம் என்பது எனது கருத்து|" என்றான்.

மறுநாள் அமைச்சரைப் பார்த்து "அந்த ராஜசகாயம் என்ற பிச்சைக்காரன் மகா புத்திசாலி" என்றார் மன்னன். "அரசே! என்னதான் மனிதர்கள் உதவி செய்தாலும்.., கடவுள் அருள் இல்லாவிட்டால் அந்த உதவி அவனுக்கு கிடைக்காது என்றே நான் நினைக்கிறேன்" என்றார் அமைச்சர்.

ஒருநாள், மன்னனால் தானம் வழங்க ஏற்பாடாகி இருந்தது. அதற்கு ராமசகாயமும், ராஜசகாயமும் வந்திருந்தார்கள். ராமசகாயத்திற்கு ஒரு வேட்டியும் ஒரு பூசணிக்காயும் கிடைத்தது. ராஜசகாயத்தைக் கண்ட மன்னன், நீதானே ராஜசகாயம் என்று கேட்க, அவன் ஆம் என்று பதிலளித்தான். அமைச்சரை வரவழைத்து, காதில் ஏதோ கூறினார். பின்பு அவனுக்கும் ஒரு வேட்டியும் ஒரு பூசணிக்காயும் கொடுக்கப்பட்டது.

சிலநாள் கழிந்த பிறகு மன்னனும், அமைச்சரும் நகர்சோதனைக்குச் சென்ற பொழுது, ராஜசகாயம் பிச்சை எடுப்பதையும், ராமசகாயம் பல்லக்கில் போவதையும் கண்டனர்.

திரும்பவும் இருவரும் அரண்மனைக்கு அழைக்கப்பட்டார்கள். "ராஜசகாயம் உன் தரித்திரம் இன்னும் தீரவில்லையா? ஒரு நல்ல பூசணிக்காய் உனக்குக் கொடுத்தேனே|"என்றார் மன்னர். ஆம் அரசே! அந்தப் பூசணிக்காயை சந்தையில் விற்று விட்டேன். ஒரு வெள்ளிக் காசு கிடைத்தது. அதை வைத்து எப்படி நான் பணக்காரனாக முடியும்" என்றான் ராஜசகாயம்.

பிறகு ராமசகாயத்தைக் கூப்பிட்டு, கொஞ்ச நாட்களுக்கு முன் நீ பிச்சை எடுத்தாயே, இப்போது எப்படிப் பணக்காரனானாய்? என்று கேட்க, "அரசே! எல்லாம் ராமபிரான் சகாயம் தான். என்னுடைய தந்தைக்கு திதி கொடுக்க வேண்டியிருந்தது. நானோ ஏழை. பிராமணருக்கு பூசணிக்கீற்றாவது கொடுக்க நினைத்து, சந்தையில் பூசணிக்காய் வாங்கினேன்.

வீட்டுக்குச் சென்று அதைக் கீறியபோது, அதன் உள்ளே நகைகளும், பவுன்களும், வைரங்களும் இருந்தன. ராமபிரான் சகாயத்தினால் நான் பணக்காரனானேன்" என்றான் ராமசகாயம். நான் ராஜசகாயத்திற்கு கொடுத்த பூசணிக்காய் ராமசகாயத்திற்கு கிடைத்திருக்கிறது! கடவுள் கிருபை இருந்தால்தான் உயர்வு பெற முடியும் என்பதை உணர்ந்தார் மன்னன் சுந்தரவதன்.


Saturday, 21 August 2010

இனி இறைவனுக்கு கொடுப்போம்..




இந்தியாவிலிருந்து வந்த சாமியார் ஒருவர் மூலம் நான் அறிந்த கதை இது. ஒரு மகாராஜா வருடம் தோறும் வெங்கடேசருக்கு ரூ 1000 பொற்காசுகளை உண்டியலில் போடுவது வழக்கம். ஒரு முறை, சுகவீனம் காரணமாக அவருக்குப் போக முடியவில்லை. ஆகவே தனது அமைச்சரை அழைத்து 1000 பொற்காசுகளை அவரிடம் கொடுத்து, திருப்பதி வெங்கடேசர் கோவில் உண்டியலில் போடும்படி அனுப்பி வைத்தார்.

கோவில் கிட்ட இருந்த காரணத்தினால் கால் நடையாகவே சென்றார். அமைச்சர் போகும் வழியில் பல பிச்சைக்காரர்கள் கை நீட்டி நின்றனர். அவர்களுக்கும் கொடுத்துக் கொண்டு கோவிலை நோக்கிச் சென்றார். உணவு பற்றாக்குறையால் உடல் மெலிந்து நின்ற நாய்கள் சில இவரைப் பார்த்து வால் ஆட்டின. கருணை உள்ளம் கொண்ட அமைச்சர், நாய்களுக்கும் உணவு வாங்கிக் கொடுத்தார். கடைசியில் உண்டியலுக்குப் போடுவதற்கு 100 பொற்காசுகள் மட்டுமே எஞ்சியிருந்தது. அந்த 100 பொற்காசுகளையும் உண்டியலில் போட்டுவிட்டு அரண்மனை திரும்பினார்.

மன்னர் அவரை அழைத்து 1000 பொற்காசுகளை உண்டிலுக்குள் போட்டதா என்று கேட்டார். அமைச்சர் நடத்தவற்றைக் கூறி, 100 பொற்காசுகளை மட்டுமே உண்டியலில் போட்டதாகச் சொன்னார். 1000 பொற்காசுகளையும் உண்டியலில் போடாததற்கு அமைச்சரை மன்னர் திட்டித் தீர்த்தார். ஒரு வேளை அமைச்சர் 900 பொற்காசுகளையும் எடுத்து விட்டு இப்படிக் கதை அளக்கிறாரோ என்று யோசித்தபடியே அன்று உறங்கினார்.

அன்று இரவு கனவில் வந்த திருப்பதி வெங்கடேசர் "நீ கொடுத்தனுப்பிய 900 பொற்காசும் எனக்குக் கிடைத்தது" என்று கூறி மறைந்தார். மறுநாள் காலை மனம் தெளிந்த மன்னர், அமைச்சரை அழைத்து புன்முறுவல் பூத்தார். அதன் பிறகு, போகும் வழியில் இருக்கும் ஏழைகளுக்கு தானதருமம் வழங்கி, மிகுதியையே உண்டியலில் இட்டு வந்தார்..

ஆகவே, எம்மிடம் இருப்பதை இல்லாதோருக்கு கொடுப்பது இறைவனுக்கு கொடுத்ததாகும்...