Thursday 29 July 2010

பயம் போக்கும் பைரவர்.!

கால பைரவர்...



பைரவரை வழிபட்டால் பிரம்மகத்தி தோஷம் நீங்கும், எம பயம் இருக்காது. திருமண தடைகள் நீங்கும், அத்துடன் பைரவர் சனிஸ்வரனின் ஆசிரியராவார் அதனால் இவரை வணங்குவதால் சனியின் தொல்லைகள் நீங்கும். எதிரிகள் அழிவர், பில்லி, சூனியம், அகலும். வழக்குகளில் வெற்றிகள் கிட்டும்.

கார்த்திகை மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி, மற்றும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு உகந்த நாளாகும். அன்றைய தினத்தில் பைரவருக்கு அர்த்தசாம பூஜை மிக விசேஷமானதாகும்.

காசியின் காவல் தெய்வமான கால பைரவர் அவதரித்ததது கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி நாளிலேயே ஆகும்.


சூலமும் , உடுக்கையும், மழுவும், பாசக்கயிறும் கைகளில் ஏந்தியபடி காட்சி தரும் கால பைரவரின் வாகனம் நாய்.

பைரவ காயத்ரி மந்திரம்...

”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ; ப்ரசோதயாத்”


மேலும் சில பைரவ அம்சங்களாவன...

அன்ன வாகனத்துடன் காட்சிதருபவர்...
அசிதாங்க பைரவர்.

காளை மாட்டு வாகனத்துடன் காட்சிதருபவர்...
உரு பைரவர்.

மயில் வாகனத்துடன் காட்சிதருபவர்...
சண்ட பைரவர்.

கழுகு வாகனத்துடன் காட்சிதருபவர்...
குரோத பைரவர்.

குதிரை வாகனத்துடன் காட்சிதருபவர்...
உன்மத்த பைரவர்.

யானை வாகனத்துடன் காட்சிதருபவர்...
கபால பைரவர்.

சிம்ம வாகனத்துடன் காட்சிதருபவர்...
பீஷண பைரவர்.





Sunday 25 July 2010

பிரதட்சண மந்திரம்...

பொதுவாக எந்தக் கோவிலை வலம் வந்தாலும்அல்லது சந்நிதிகளை சுற்றி வந்தாலும் இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு சுற்றிவருவது விசேஷமாகும்.

யாநி காநிச பாபாநி ஜன்மாந்த்ர கிருதாநிச!
தாநி தாநி ப்ரணச்யந்தி பிரதட்சிண பதே பதே!


"பல ஜென்மங்களில் செய்த பாவங்கள கோவிலை பிரதட்சணம் செய்வதால் விலகும்" என்பது இதன் பொருள்.

பிரதட்சணம் செய்யும் பொது நிதானமாக அடிமேல் அடிவைப்பது போல நடக்க வேண்டும்.

கோவில்களையோ அல்லது தெய்வ சந்நிதிகளையோ பிரதட்சணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்...

மூன்று முறை வலம் வந்தால் :- இஷ்ட சித்தி அடையலாம்.

ஐந்து முறை வலம் வந்தால் :- வெற்றிகள் கிட்டும்.

ஏழு முறை வலம் வந்தால் :- நல்ல குணங்கள் பெருகும்.

ஒன்பது முறை வலம் வந்தால் :- நல்ல புத்திர பாக்கியம் கிட்டும்.

பதினோரு முறை முறை வலம் வந்தால் :- ஆயுள் பெருகும்.

பதின் மூன்று முறை முறை வலம் வந்தால் :- செல்வம் பெருகும்.

நூற்றியெட்டு முறை வலம் வந்தால் :- அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்.




Sunday 18 July 2010

சண்டேசுவரர்(ரி) வழிபாடு...


சண்டேசுவரர்...



ஆலய வழிபாடு சண்டேசுவரர்(ரி) வழிபாடுடன் நிறைவு பெறுகிறது. நமது ஆத்மார்த்த பூஜைகளிலும் இந்த வழிபாடே பூஜை முடிவில் செய்யப் படுகின்றது.

சண்டேசுவர் சந்நிதி கர்ப்பகிரகத்தின் இடப்பக்கத்தில் சிறியதோர் இடைவெளி விட்டு அமைக்கப் பட்டிருக்கும். மூலவருக்கு சாத்திய மாலையும், நைவேத்தியமுமே இங்கு பூஜைக்கு உரியவையாகின்றன.

சண்டேசுவரரை(ரி), சண்டிகேசுவரர்(ரி) என்றும் அழைப்பர். இவர் இறைவன் திருவருள் பெற்ற அடியார். எப்போதும் இறைவனின் தியானத்திலேயே அமர்ந்திருப்பவர். இதனால் இவரை நேர்முகப்படுத்தி அருள் பெறுவதற்க்கு இவர் சந்நிதிமுன் மூம்முறை கைத்தாளம் (கைதட்டி) இட்டு இறை தரிசனத்தின் பலனை தருமாறு வேண்டுகிறோம்.

சிலர் சண்டேசுவரர்(ரி) சந்நிதியில் தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளில் நூல் எடுத்து போடுவது வழக்கமாகக் காணப்படுகிறது. சிலர் அறியாமையாலும், சிலர் மற்றவர் செய்வதைப் பார்த்து செய்யும் பழக்கத்தாலும் உருவாகிய இந்த தவறான செயலை அறவே அகற்றுதல் வேண்டும்.


Sunday 4 July 2010

நமஸ்காரங்கள்...

நமஸ்காரம் என்பது அஷ்டாங்க நமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம், திரியங்க நமஸ்காரம், ஏகாங்க நமஸ்காரம் என்று நான்கு வகைப்படும். இறைவனை நமஸ்காரம் செய்வதால் எல்லாப் பாவங்களும் தீர்ந்து சிவ கடாட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.

அஷ்டாங்க நமஸ்காரம்

மார்பு, தலை, நெற்றி, இரு கால்கள், இரு புஜங்கள், கைகள், இவைகள் நிலத்தில் படும் படி படியாக செய்யும் நமஸ்காரம் அஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும்.

பஞ்சாங்க நமஸ்காரம்

தலை, இரு கைகள், இரு முழங்கால்கள், இவைகள் நிலத்தில் படும் படி படியாக செய்யும் நமஸ்காரம் பஞ்சாங்க நமஸ்காரம் எனப்படும்.

திரியங்க நமஸ்காரம்

இருகரங்களையும் தலைக்குமேல் கூப்பி தலை வணங்கி செய்யும் நமஸ்காரம் திரியங்க நமஸ்காரம் எனப்படும்.

ஏகாங்க நமஸ்காரம்

தலையை மாத்திரம் தாழ்த்தி வணங்குவது ஏகாங்க நமஸ்காரம் எனப்படும்.