Showing posts with label தர்ப்பை. Show all posts
Showing posts with label தர்ப்பை. Show all posts

Thursday, 17 June 2010

தர்ப்பையின் மகிமை...

சுப காரியம் அல்லது அசுப காரியம் எதுவாய் இருந்தாலும் அங்கே தர்ப்பை புல்லுக்கு முக்கியமான இடம் உண்டு. கிரகண காலங்களில் சேமிக்கும் உணவு பதார்த்தங்கள் இருக்கும் பாத்திரங்களில் தர்ப்பை புல்லை போட்டு வைத்தால் அவை பாதிப்படையாமல் இருக்கும் என்பார்கள்.

அரிதான இடங்களில் மட்டுமே வளரும் புல் வகை தாவரமான தர்ப்பையில் பலவகைகள் உண்டு.

தர்ப்பையால் பவித்திரம் ( மோதிரம் போன்ற வளையம் ) செய்து , ஆண்கள் வலது மோதிர விரலிலும், பெண்கள் இடது மோதிர விரலிலும், அணிந்து கொண்டு சங்கல்பம் செய்த பின்னரே எந்த காரியத்தையும் ஆரம்பிப்பார்கள்.

நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து தான் தரப்பை புல் அரிவார்கள். "தீர்த்தத்தின் மறு ரூபமே தர்ப்பை, தீர்த்தம் வேறு தர்ப்பை வேறல்ல" என்கிறது வேதம். இதற்காக ஒரு புராணக் கதையும் சொல்லப் படுகிறது,

விருத்திராசுரன் என்ற அசுரன், தேவர்களுக்கும், பூலோக உயிர்களுக்கும் பெரும் கொடுமைகள் புரிந்து வந்தான். இதனால் கோபங்கொண்ட தேவேந்திரன். தனது வஜ்ஜிராயுதத்தை பிரயோகித்து அவனை அழிக்க முயன்றும் பலனில்லை, அசுரன் மீண்டும் மீண்டும் தேவேந்திரனை போருக்கு அழைத்தான், திகைத்தான் இந்திரன். இதைக் கண்ட பிரம்மா, வஜ்ஜிராயுதத்தை தனது கமண்டல தீர்த்தத்தில் நனைத்து கொடுத்து இப்போது பிரயோகிக்குமாறு கூற தேவேந்திரனும் அவ்வாறே செய்தான்.

தீர்த்தத்தின் மகிமையால் பலம் பெற்ற வச்சிராயுதம் விருத்திராசுரனின் அங்கங்களை கண்ட துண்டமாக வெட்டியது. வஜ்ஜிராயுதத்தின் பலத்துக்கு காரணம் புனித தீர்த்தங்களே என்று அறிந்த விருத்திராசுரன், உலகிலுள்ள எல்லா தீர்த்தங்களுக்கும் சென்று, ரத்தம் வழியும் தனது உடலை நனைத்து தீர்த்தங்களின் புனிதத்தை மாசுபடுத்த முயன்றான். இத கண்ட பிரம்மா தீர்த்தங்களை எல்லாம் தர்ப்பை புட்களாக மாற்றி விட்டாராம்.

இதனால்தான் தான் தர்ப்பை விசேடமாக திகழ்கிறதாம்....